மாநகராட்சியில் உள்ள ஒரு வார்டின் 3 தெருக்களுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயர் வைக்க வேண்டும் என பெண் கவுன்சிலர், தீர்மானம் கொண்டு வந்தார். இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மொத்தம் 63 தீர்மானங்கள் முன் மொழியப்பட்டன. அப்போது, திமுக 36வது வார்டு கவுன்சிலர் வசுமதி, 36வது வார்டில் மணக்களம் தெரு என மாநகராட்சி பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 முதல் 3வது தெரு என மாற்றம் செய்து மாநகராட்சி பதிவேட்டில் ஏற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அந்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாநகராட்சி கூட்டத்தில் வசுமதி கொண்டுவந்த எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை, ஏற்கனவே உள்ள மணக்களம் தெருவின் பெயரில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறியுள்ளார்.










