தமிழில் ‘கன்னத்தில் முத்தமிட்டால், கச்சேரி ஆரம்பம், அரிமாநம்பி, காரி‘ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி. இவர் வில்லனாகவும் பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
இவர் தமிழை விட தெலுங்கில் அதிகமாக நடித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் , விவாகரத்து செய்து கொண்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜே.டி.சக்கரவர்த்தி அளித்துள்ள பேட்டியில் தன்னை விஷம் கொடுத்து கொலை சதி நடந்ததாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ எனக்கு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனக்கு மது, சிகரெட், போதைப்பொருள் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. ஆனாலும் மூச்சுவிடவே சிரமப்பட்டேன். இந்தியா, இலங்கையில் நிறைய பேரிடம் சிகிச்சை எடுத்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருகட்டத்தில் உடல்நிலை மோசமாகி விட்டது. இனி பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர்கள் கைவிட்டனர். அப்போது நாகர்ஜுனா என்ற டாக்டர் எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்தார். எனக்கு வேண்டிய ஒருவர் 8 மாதங்களாக எனக்கு ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதை அந்த டாக்டர் கண்டுபிடித்தார் “ என்று கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி பரபரப்பாகி உள்ளது.










