ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை இஷ்ரத் காதரி, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த படங்களில் பாடியிருக்கிறார். மேலும் ரஹ்மானுடன் பல இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் இஷ்ரத் தற்போது பாரதியார் எழுதிய ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி…‘ என்கிற பாடலை வைத்து ‘எந்தையும் தாயும்‘ என்ற தலைப்பில் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை அவரே அமைத்து, பாடி, நடித்துள்ளார்.
விஜய் நடித்த ‘மதுர‘ படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கியுள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ஆல்பத்தை கனிமொழி எம்பி., வெளியிட்டார். இஷ்ரத் கூறும்போது “நம் நாட்டின் பெருமைகளை கூறவும், தாய் நாட்டின் மீதுள்ள நன்றியை வெளிப்படுத்தவும் இந்த ஆல்பத்தை உருவாக்கி உள்ளேன். தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட இருக்கிறேன். விரைவில் திரைப்படங்களுக்கு இசை அமைக்கவும் இருக்கிறேன்“ என்றார்.










