தமிழ் சினிமாவில் எண்பது காலக்கட்டத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் விஸ்காம் துறையின் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை பல்கலைகழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகரும் கலந்துகொண்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னையில் அரசு பணியில் வேலைக்கு சேர்ந்தார். எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை‘ படத்தின் மூலம் சவுண்ட் என்ஜினீயரான இவர் பின்னர் டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அதனைத்தொடர்ந்து 1981-ம் ஆண்டு ‘சட்டம் ஒரு இருட்டரை‘ படத்தின் மூலம் இயக்குனரானார். அதன்பிறகு 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். பாலிவுட் படங்களும் இயக்கியுள்ளார். பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கிஸ், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தனது மகன் விஜய்யை தனது தயாரிப்பு படங்களில் நடிக்க வைத்து ஹீரோவாக்கினார். இப்போது அவர் முன்னணி நடிகராக இருக்கிறார்.










