இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்‘. இதில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், சிம்ரன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 5 வருடங்களுக்கு முன் தயாரான இந்த படம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கவுதம் மேனன் கூறியதாவது, “ இந்த படத்தின் கதை நான் சூர்யாவுக்கு எழுதியது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. காரணம் குறித்து இப்போது பேசத் தயாராக இல்லை. அதன் பிறகு ரஜினியிடம் சொன்னேன் அவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் ஏனோ நடிக்கவில்லை. அதன் பிறகு தான் விக்ரம் நடிப்பது முடிவானது. இதனால் கதையில் விக்ரமிற்கு ஏற்றவாறு சில மாறுதல்களை செய்தேன்.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பின்னணியை கொண்டு தயாராகி உள்ள படம். பல பாகங்களாக எடுக்க திட்டமிட்ட படம். தற்போது முதல் பாகம் வெளியாகிறது. இந்த பாகத்தில் முடிவில் அடுத்த பாகத்திற்கான டுவிஸ்ட் இருக்கும். அடுத்தடுத்த பாகங்களை கண்டிப்பாக இயக்குவேன். அந்த பாகங்களில் வேறு ஹீரோ, வேறு வில்லன்கள் இருப்பார்கள். படம் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் இதன் தொடர்ச்சியை உருவாக்கி கொண்டே இருப்பேன். துருவ நட்சத்திரம் என்பது தனித்துவமானது. அதில் எந்த ஹீரோவும் நடிக்கலாம். நடிப்பவர்கள் துருவ நட்சத்திரமாவார்கள். இஸ்தான்புல், பல்கேரியா, ஜார்ஜியா நியூயார்க், துருக்கி, அபுதாபி உள்பட பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ள படம்“ என்றார்.










