மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்‘ அதே பெயரில் தமிழில் ரீ-மேக் ஆகியுள்ளது. கண்ணன் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக ராகுல் நடித்துள்ளார். பிப்ரவரி 3-ல் இந்த படம் திரைக்கு வர உள்ளது. சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், “ஆணாதிக்கம் இன்னமும் இருக்கிறது. நகரங்களில் சற்று குறைந்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது. பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசம் இல்லை. எந்த கடவுளும் என் கோயிலுக்கு இவுங்க வரணும், அவுங்க வரக்கூடாது என சொல்லவில்லை. இது நாமாக வகுத்து கொண்ட சட்டங்கள், எந்த கடவுள் அப்படி சொல்லியிருக்கிறார், நீங்கள் சொல்லுங்க பார்ப்போம். சபரிமலை என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கோயிலும் எந்த கடவுளும் இப்படி செய்யக்கூடாது, அப்படி செய்யக்கூடாது, இத சாப்பிடனும், சாப்பிடக்கூடாது, இதெல்லாம் தீட்டு என்று சொல்லவில்லை. இது நாம் உருவாக்கியது. இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஒருபோதும் நம்புவதில்லை“, என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.










