இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் மாபெரும் வெற்றியை கொடுத்த படம் ‘ஆர்ஆர்ஆர்‘. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கதாநாயகர்களாக நடித்து இருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ‘நாட்டு நாட்டு‘ பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த படத்தில் பங்கு பெற்ற பலரும் இந்த மகிழ்ச்சியை மீடியாக்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த விதமாக ‘ஆர்ஆர்ஆர்‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு பேட்டி ஒன்றில் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டபோது இந்த விருது கிடைக்க நானும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜய் தேவ்கன் தற்போது தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த ‘கைதி‘ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படம் ஹிந்தியில் ‘போலா‘ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ‘‘ஆர்ஆர்ஆர் படத்தில் ‘நாட்டு நாட்டு‘ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு நானும் ஒரு காரணம். ஏனென்றால் இந்த பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆடியதற்கு பதிலாக நான் ஆடி இருந்தால் என்ன ஆகியிருக்கும்….? நான் நடனம் ஆடாததால் தான் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது“ என நகைச்சுவையாக கூறியுள்ளார் நடிகர் அஜய் தேவ்கன்.










