பொதுவாக காலநிலை மாற்றத்தால் பலருக்கு அடிக்கடி சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை ஏற்படுவது வழக்கம். மழை, பனி உள்பட குளிர்ச்சியான தட்பவெப்பம், வெயில் நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்வோட்டர் குடிப்பது, இரவு தூங்கப்போவதற்குமுன் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றது. குறிப்பாக, தொண்டையில் சளி கட்டிக்கொண்டால் இது நம்மை பாடாய்படுத்தும்.
இதனை ஒரு சில எளியவழியில் போக்க முடியும் தற்போது அவற்றை பார்ப்போம்.
ஒரு டம்ளர் தண்ணீரை 5 நிமிடங்கள் சூடாக்கி, அதில் ஒரு ஸ்பூன் உப்பு (உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் இமயமலை உப்பு அதாவது இந்து உப்பு) மற்றும் மஞ்சள் தூள் கலந்து வாயை 3-4 முறை கொப்பளிக்க வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பான பதத்தில் இருக்க வேண்டும். 1 ஸ்பூன் அதிமதுரப் பொடியை தேனில் கலந்து சாப்பிடுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயை கொப்பளித்து துப்பலாம்.
வெற்றிலைக் கொடியின் தண்டுப் பகுதியை மட்டும் வாயில் போட்டு மென்று விழுங்க தொண்டை கரகரப்ப் நீங்கும். வெற்றிலையை மைய அரைத்து அதன் சாறில் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவுங்கள். தொண்டை சளி நீங்கி, தொண்டை கட்டியிருந்தாலும் சரியாகும். பசும்பாலுடன் (சுத்தமான நாட்டு பசும்பால் இருந்தால் நல்ல வசதி) 1 பூண்டு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வர தொண்டை சளி கரைந்துவிடும்.
முருங்கை இலை சாறு அல்லது குப்பைமேனி இலை சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவ சளி நீங்கும். கற்பூர வல்லி இலையை மென்று விழுங்கினாலும் சளிக்கு நல்லது. துளசி இலைஅல்லது இஞ்சியை கொதிக்க வைத்து அவ்வப்போது தொண்டைக்கு இதமாக இருக்க குடித்து வந்தாலே சளி கரையும்.
சிற்றரத்தை பொடி சுடுநீரில் கலந்து குடிக்கவும் (காலை மாலை), வாரம் 2 முறை கபசுர குடிநீர் அருந்தவும். கை, கால் சுத்தமாக வைத்து இருக்கவும். வாரம் ஒரு முறை நீராவி பிடிக்கவும். நோய் எதிர்ப்பு சக்தி உணவு சாப்பிட்டு வரவும்.










