அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (டிச.23) ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அமைச்சராக பொறுப்பேற்றது முதல் உதயநிதி ஸ்டாலின், அனைத்து பணிகளையும் சுறுசுறப்புடன் கவனித்து வருகிறார். பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். பல இடங்களுக்கு சென்று, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சென்ற அவர், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது காலை உணவு திட்டத்தின்படி மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். தொடர்ந்து மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து ஊக்கப்படுத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இருந்தனர்.










