வரும் 2ம் தேதி, வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி அருகே ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், இன்று வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா பெரும் புகழ் பெற்றது. பகல் பத்து, ராப் பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடத்தப்படும். இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு (டிச.22) தொடங்கியது. இன்று (டிச.23) பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும். இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதேபோல் தினமும், நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல் பத்து உற்சவத்தின் 10வது நாளான ஜனவரி 1ம் தேதி, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
அன்று நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருகிறார். பின்னர் திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சேருகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
மறுநாள் (2ம் தேதி) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்கிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் தினமான 2ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழித்திருநாள் தொடங்குகிறது. அதன் பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 8ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ம் திருநாளான 9ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11ம் தேதி தீர்த்த வாரியும், 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் அனைத்து கோபுரங்கள் மற்றும் வீதிகளில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருடத 2ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.










