எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பலரின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகும் இவரின் நடிப்பிற்கு கணவர் எவ்வித தடையும் போடாததால், தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் மறைவு மீனாவால் ஏற்றுக் கொள்ள முடியாததால், தற்போது வரை அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சோஷியல் மீடியாவில் மீனாவின் இரண்டாவது திருமணத்தை குறித்து பல வதந்திகள் எழுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய இரண்டாவது திருமணத்தை குறித்து முதல் முதலாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வாய் திறந்து பேசி இருக்கிறார். ஏனென்றால் மனைவியை விவாகரத்து செய்திருக்கும் தனுஷ், மீனாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பெரும் பரபரப்பை கிளப்பினார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாகவே மீனா பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். கணவர் இல்லை என்பதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும்போது, எப்படி இப்படி எல்லாம் இவர்களால் பேச முடிகிறது என்பதை தற்போது வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய மனதில் இப்போது இருப்பதெல்லாம், மகள் நைனிகாவிற்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர வேண்டும் என்பதுதான். இதற்கிடையில் நல்ல கதை அமைந்தால் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்துவேன் என்று நடிகை மீனா கூறியுள்ளார்.










