பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த ‘வாரிசு‘ படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா மற்றும் சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தமன் இசை அமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். தில்ராஜூ தயாரித்திருந்தார்.
இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் வசூலில் நல்ல லாபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 250 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 5 நாளில் ரூ.150 கோடி வசூலை எட்டி உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் சென்னை நட்சத்திர ஓட்டலில் வெற்றி விழாவை கொண்டாடினார்கள். இதில் விஜய் , ராஷ்மிகா மந்தனா தவிர மற்ற கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குனர் வம்சி, “படக்குழு என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்த படம். அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யிடம் இந்த கதை சொல்லும்போது, ‘நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்‘ என சொன்னேன்.
மேலும் என்னை பலரும் தெலுங்கு இயக்குனர் என கூறுவது காயப்படுத்துகிறது. நான் தமிழ், தெலுங்கு ஆள் இல்லை. முதலில் நான் ஒரு மனிதன். பார்வையாளர்களின் வரவேற்பின் மூலம் என்னைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் அனைத்து எல்லைகளையும் கடக்க முயலும் மனிதன். மனதில் எனக்கு சிறிய இடமளித்த தமிழ் மக்களுக்கு நன்றி. ‘இது பக்கா தமிழ் படம்‘ என்பதைத் நான் முதலிலிருந்து கூறி வருகிறேன். என் தந்தை படம் பார்த்து கண்ணீர்விட்டார். அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்“ என்றார்.










