தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ‘மாவீரன்‘ வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘எஸ்கே21‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘எஸ்கே21‘ படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இந்த காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக ‘மிக்ஜாம்‘ புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டிருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் அரசு, திரைப்பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் ஈடுபட்டனர்.










