நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான நடிகர் அபிநய், ‘சென்னை 28 பாகம் 2, ரமானுஜன்‘ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமானார். இவரது மனைவி அபர்ணா, மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி நெருங்கிய தோழியிடமே பண மோசடி செய்துள்ள விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அபர்ணாவின் தோழியான மஞ்சு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லை. இதைகேட்ட அபர்ணா, பிரபல மருத்துவ கல்லூரியில் தனக்கு நண்பர் இருப்பதாகவும் அவரிடம் 20 லட்சம் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அபர்ணாவின் வங்கி கணக்கிற்கு 5 லட்சம் ரூபாயை மஞ்சு செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா, சீட் கிடைத்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து மஞ்சுக்கு அனுப்பியுள்ளார். சான்றிதழுடன் கல்லூரி அட்மிசனுக்கு சென்ற மஞ்சுவுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் போலி சான்றிதழ் என்று கூறி அட்மிசன் போட மறுத்துவிட்டனர்.
இதனால் மஞ்சு பணத்தை திருப்பி கேட்க, உஷாரான அபர்ணா தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணா மீது மஞ்சு புகார் அளித்துள்ளார். அபர்ணா மற்றும் அவருக்கு உதவிய அஜய் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.










