மிமிக்ரி கலைஞரான கோவை குணா அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் புகழ்பெற்ற குணா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது இறப்புக்கு காரணம் அவரிடமிருந்த தவறான பழக்க வழக்கங்கள் தான் என சிலர் பேசியுள்ளனர். இது குறித்து மதுரைமுத்து கூறியதாவது, “பண்முக கலைஞர் என்றாலே அது கோவை குணா மட்டுமே. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தன்னுடன் இருக்கும் கலைஞர்களை போட்டியாக நினைக்கமாட்டார். சிலர் குணாவிற்கு இருந்த கெட்ட பழக்கத்தால் அவர் இறந்துவிட்டார் என்று கூறகின்றனர்.
அது ரொம்ப தவறான ஒன்று. அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறதே தவிர, கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. பல குரல் கலைஞர்கள், பன்முகத் தன்மையில் விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும். அதுதான் அந்த விருதுக்கும் பெருமை, வாங்குபவர்களுக்கும் பெருமை. விரைவில் குணாவுக்காக நடைபெறவுள்ள கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம்“ என்று மதுரைமுத்து கூறியுள்ளார்.










