உக்ரைன் நாட்டில் நீடித்த அமைதியை விரைவாகக் கொண்டு வர வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேறியது. இது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வலியுறுத்தியும், உக்ரைனில் நீடித்த அமைதியை விரைந்து ஏற்படுத்தக் கோரியும் ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தைக் கொண்டு வந்துப் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், போர்கள் பிராந்திய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும், பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இதனால் உலக நாடுகளின் கவனம் உண்மையான பிரச்சனைகளில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அவையில் அமேரிக்கா உள்ளிட்ட 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தனர். 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்தனர். இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
உக்ரைன்- ரஷியா பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.










