தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தற்போது ‘ஆதிபுருஷ்‘ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலார்‘ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இதில் பிரபாஸ் நடித்திருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ‘ஆதிபுருஷ்‘ படத்தை விட அதிகமாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து தற்போது இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்குமே தனது சொந்த பணத்தில் இருந்து தலா பத்தாயிரம் ரூபாயை அவர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தியுள்ளார் நடிகர் பிரபாஸ். ‘சலார்‘ படக்குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ்.










