மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த ‘சீடன்‘ , அனுஷ்காவின் ‘பாகமதி‘ மற்றும் சந்தாவின் ‘யசோதா‘ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்திலும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் தயாரிப்பாளராக மாறி இவர் தயாரித்த ‘மேப்படியான்‘ மற்றும் ‘மாளிகைப்புரம்‘ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் அள்ளி குவித்தது.
இந்நிலையில் இவர் கடந்த 2018-ல் உன்னி முகுந்தன் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். தான் அடுத்ததாக எடுக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் குறித்து பேசுவதற்காக ரிசார்ட் ஒன்றுக்கு தன்னை அழைத்த உன்னி முகுந்தன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டில் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை என்றும் தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே சம்பந்தப்பட்ட அந்த பெண் இப்படி தவறாக புகார் அளித்திருக்கிறார் என்றும் இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறி உயர்நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் அளித்த சம்பந்தப்பட்ட பெண் இந்த வழக்கிலிருந்து பின்வாங்க மறுத்துவிட்டதால் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல தொடரும் என்று கூறி உன்னி முகுந்தனின் மனுவை நிராகரித்து விட்டது.










