சென்னையில் கே.கே.நகரில் உள்ள ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் வடபழனி-ஆற்காடு சாலையில் சென்றுள்ளார். செந்தில் ஏஜன்சி அருகே சென்றபோது சாலிகிராமம், எம்.சி.அவென்யூவைச் சேர்ந்த சினிமா துணை நடிகர் பழனியப்பன் (41) தன் நண்பர் துரைராஜ் என்பவருடன் காரில் அதே பகுதியில் வந்துள்ளார்.
அப்போது குடி போதையில் ஓட்டி வந்த பழனியப்பனின் கார், சரண்ராஜின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன்பின் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து, சரண்ராஜ் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனியப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் சரண்ராஜூம் துணை நடிகராக உள்ளார் என்றும், இவரும் பழனியப்பனும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் இது விபத்தா அல்லது கொலையா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.










