இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இந்தியில் உருவான திரைப்படம் ‘பதான்‘. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், சல்மான் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25-ம் தேதி அன்று உலகமெங்கும் உள்ள 7,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம், முதல் நாளிலே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் படத்தின் 2-ம் நாள் வசூலுடன் சேர்ந்து ரூ.235 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானபோது, தீபிகா படுகோனே அணித்திருந்த கவர்ச்சி மிகுந்த காவி நிற பிகினி குறித்து சர்ச்சை எழுந்தது.
இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் வன்முறையும் உருவானது. இதனிடையே திரைப்படம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படம் ரூ. 88.74 கோடி ரூபாய் வசூலும், 2017-ம் ஆண்டு வெளியான ஜாப் ஹாரி மெட் செஜால் ரூ.62 கோடி ரூபாய் மட்டுமே இந்தியாவில் வசூலித்திருந்தது. அது ஷாருக்கானின் சினிமா பயணத்தில் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
