கேரளாவைச் சேர்ந்த நடிகை அர்த்தனா பினு முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், மாடலிங் செய்ய துவங்கினார். இதனால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், தெலுங்கில் ‘சீதா மகாலட்சுமி‘ என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமான ‘முதுகவ்‘ என்கிற படத்தில் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் 2017-ம் ஆண்டு வெளியான ‘தொண்டன்‘ படத்தில் அறிமுகமான இவர், பின்னர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ‘செம‘ படத்திலும், நடிகர் கார்த்திக் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்‘ மற்றும் ‘வெண்ணிலா கபடி குழு 2‘ என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல மலையாள நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். கடந்த 10 ஆண்டுகளாக தனது தாயார், தங்கையுடன் தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்த்தனா பினு தனது தந்தை குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளீயிட்டு பயங்கர குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
தனது சமூகவலைதள வீடியோவில் அவர் கூறியதாவது, தயவு செய்து முழுவதையும் படிக்கவும்….‘‘ காலை 9.45 மணியளவில் காவல் நிலையத்திற்கு உதவி கேட்டும் அழைத்தும், இதுவரை யாரும் எந்த நடவடிக்கை எடுக்காததால் இந்தப் பதிவை இடுகிறேன். இந்த வீடியோவில் இருப்பவர் மலையாள திரைப்பட நடிகரான எனது தந்தை விஜயகுமார்.
நான், என் அம்மா, தங்கை ஆகியோர் கடந்த பத்து ஆண்டுகளாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறோம். ஆனால் சொத்துக்காக சுவர் ஏறி குதித்து எங்கள் வீட்டில் அத்துமீறி நுழைய பார்க்கிறார். எனது பெற்றோர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவர்கள், நானும் எனது அம்மாவும், எனது சகோதரியும் 85 வயதுடைய எனது தாய்வழி பட்டியுடன் எங்கள் தாய் வீட்டில் வசித்து வருகிறோம். அவர் பல ஆண்டுகளாக அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து வருகிறார். அவர் மீது பல போலீஸ் வழக்குகள் உள்ளன. இன்று, அவர் எங்கள் வீட்டிற்கு நுழைந்தார், கதவு பூட்டப்பட்டிருந்தால் அவர் திறக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியாக எங்களை மிரட்டினார்.
என் தங்கையையும், பாட்டியையும் கொன்றுவிடுவதாக மிரட்டுவதைக் கேள்விப்பட்டபோது அவரிடம் பேசினேன். படங்களில் நான் நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்றும், நான் அவர் பேச்சை கேட்காவிட்டால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் மிரட்டினார். நான் நடிக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் கூறினார். ஜன்னலில் முட்டிக்கொண்டு கத்திக் கொண்டே இருந்தார்.
நான் படப்பிடிப்பை முடித்துள்ள எனது மலையாளப் படத்தின் குழுவையும் அவர் மோசமாக பேசினார். எனது வேலைபார்க்கும் இடத்தில் அத்துமீறி நுழைந்து, ஊடுருவி, பிரச்சனைகளை உருவாக்கினார். என் அம்மாவின் பணியிடத்திலும், சகோதரியின் கல்வி நிறுவனத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக நானும் என் அம்மாவும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அதன்பிறகு தான் இவையெல்லாம் நடக்கின்றன. என் விருப்பப்படி மட்டுமே படங்களில் நடிக்கிறேன்.
நடிப்பு என்பது எப்போதுமே எனது விருப்பம், எனது உடல்நிலை என்னை அனுமதிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். நான் மலையாளப் படத்தில் நடிக்கும்போதெல்லாம் என்னை நடிக்கவிடாமல் தடுக்க வழக்கு தொடர்ந்தார். நான் ஷைலாக் படத்தில் நடித்தபோது கூட, அவர் ஒரு சட்டப்பூர்வ வழக்கைத் தொடர்ந்தார், மேலும் படம் கிடப்பில் போடப்படுவதை தடுக்க, நான் என் சொந்த விருப்பப்படி படத்தில் நடித்தேன் என்று அதிகாரப்பூர்வ சட்ட ஆவணத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது. எழுத இன்னும் நிறைய இருக்கிறது ஆனால் தலைப்புக்கு அனுமதிக்கப்பட்ட வார்த்தை வரம்பு என்னை அனுமதிக்கவில்லை. என் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய பணம் மற்றும் தங்க நகைகளை மீட்டுத் தரக் கோரி அவர் மீது வழக்கு நடந்து வருகிறது “ என தெரிவித்துள்ளார்.
