சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து சிகிச்சை மேற்கொண்டதில் இரண்டு பேர் பாதிக்கபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆணையத்தில் திடீர் புகார் அளித்ததால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் சித்த மருததுவர் ஷர்மிகா. தமிழக பாஜக-வின் சிறுபான்மை பிரிவு தலைவராக மருத்துவர் டெய்சி சரண் இருந்து வருகிறார். இவரது மகள் ஷர்மிகா சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கி சிக்கலில் சிக்கி இருந்தார். அந்த வகையில் தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும். பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும். பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார்.
மக்களுக்கு பல எளிய குறிப்புகளை சொல்லுகிறேன் என்ற பெயரில், எக்கச்சக்க உருட்டுக்களையும் சொல்லி ‘உருட்டு டாக்டர்‘ என்று அழைக்கப்பட்டார். சில மாதங்கள் பல மீம் க்ரியேட்டர்களுக்கும் டாக்டர் ஷர்மிகா தான் கன்டென்ட் ஆக இருந்தார். ஷர்மிகா தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அவர் பேசிய சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவல் பரப்புவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஷர்மிகா தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு இருந்தார். மேலும் ,இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் அவர் மீது இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஷர்மிகாவின் மருத்துவ குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்படைந்ததாக எழுத்துப்பூர்வ புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன்வந்து விசாரணை செய்த நிலையில், தற்போது அவரால் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுத்துள்ளதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
