பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றுக்கு காரில் சென்றபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
அப்போது காரை விட்டு இறங்கி ஒரு வாலிபரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்றார். மறுநாள் அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கு லிப்ட் கொடுத்த இளைஞருக்கு நன்றி தெரிவித்தார்.
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவர் எப்படி சட்டவிதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லலாம் என்று விமர்சனம் எழுந்தது. உடனடியாக அமிதாப் அந்த படம் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது, சும்மா ஜாலிக்காக அதனை வெளியிட்டேன் என்று அதனை மறுத்துள்ளார். இதே போன்று சர்ச்சையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் சிக்கினார்.
போக்குவரத்து நெரிசலில் ஒரு இளைஞரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இந்த இரு சம்பவங்களும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தற்போது இவர்கள் இரண்டு பேரையும் அழைத்து சென்ற வாகன ஓட்டிகள் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக மும்பை போக்குவரத்து போலீஸ் துறை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
நடிகர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதியா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
