பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 6 பேர் பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நாக்லா கங்கர் பகுதியில் லக்னோவில் இருந்து ஆக்ரா செல்லும் விரைவு சாலையில் ஒர பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய பஸ், அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை உள்பட 6 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 21 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ரீனா (22), அவரது ஒரு வயது மகன் அயன்ஷ், பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (25), கவுசாம்பி மாவட்டத்தை சேர்ந்த சந்த் லால் (70) ஆகியோர் என அடையாளம் தெரிந்தது. மற்ற 2 பேர் யார் என தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
